Home » » அனைவரும் அறிய வேண்டிய POST Power On Self Test

இது வழக்கமாக நமக்குத் தபால்களைக் கொண்டு வருபவர் நம் கதவுகளைத் தட்டி எழுப்பும் குரல் அல்ல. கம்ப்யூட்டரின் இயக்க தொடக்கத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு போஸ்ட் சோதனை (POST Power On Self Test) எப்போதாவது இதனைப் பற்றிக் கேள்விப் படுகையில், இந்த சோதனையின் போது கம்ப்யூட்டரில் என்ன நடக்கிறது என்று எண்ணிப் பார்த்திருக்கிறீர்களா! இப்போது காணலாம்.
ஒவ்வொருமுறை நம் கம்ப்யூட்டரை பூட் செய்திடும்போதும், இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. சில வேளைகளில் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கி, வேலை களை மேற்கொள்ளத் தயாராக நிற்கிறது. சில வேளைகளில் தயங்குகிறது. இல்லையா? அதற்குக் காரணம் இந்த சோதனை தான்.
ஒவ்வொரு முறை கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும் போதும் தன் சிஸ்டம் தேவைகள் அனைத்தும் சரியாக உள்ளனவா என்று சோதனை செய்கிறது. இந்த சோதனையில் மொத்தம் குறைந்தது பத்து சோதனைகள் செய்யப்படுகின்றன. முதல் டெஸ்ட் அதன் மின்சக்தி தேவை குறித்து. அடுத்தது, தன் சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் (CPU (Central Processing Unit)) என்னும் மையச் செயலகம், கட்டளைகளை இயக்கத் தயாராக உள்ளதா என்பது குறித்த சோதனை. மூன்றாவதாக, இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும். அவற்றில் BIOS கட்டளைகள் படித்து அறிந்து இயக்கக் கூடியனவாக உள்ளனவா என்பது குறித்து மேற்கொள்ளப்பட்டு உறுதி செய்யப்படும். 
இதனை அடுத்த சோதனை சிமாஸ் CMOS (Complementary Metal Oxide Semiconductor) குறித்து. இதுவும் சரியாக உள்ளதா? ஆணைகளை எடுத்து இயக்குமா? என்ற ரீதியில் இருக்கும். ஏழாவது சோதனை கம்ப்யூட்டரின் மெமரி குறித்து. மெமரியின் அனைத்து பாகங்களும், மெமரி கண்ட்ரோலர், மெமரி பஸ் மற்றும் மெமரி மாட்யூல் போன்றவை இந்தச் சோதனைக்கு ஆளாகின்றன.
இந்த மெமரி சோதனைகளைத் தொடர்ந்து, மெமரி இயக்கத்தில் உள்ளதா? POST குறியீடுகளை மேற்கொண்டு இயங்குமா என்ற சோதனை தொடங்கி முடியும். இறுதியான இரண்டு சோதனைகளும் I/O bus மற்றும் controller என அழைக்கப்படும் சாதனங்கள் சம்பந்தப்பட்டது. இந்த இரண்டும் எப்போதும் அணுகப்படும் விதத்தில் தயாராக இருக்க வேண்டும். வீடியோ மெமரியை இது படிக்க முடியுமா என்பதும் இந்த சோதனையில் இருக்கும். 
உங்கள் கம்ப்யூட்டர் மேலே சொல்லப் பட்ட சோதனைகளில், ஏதாவது ஒரு சோதனையில் பிரச்னை ஏற்பட்டாலும், நமக்கு அதற்கான பிழைச் செய்தியைக் காட்டி கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் நின்று விடும். இந்நேரத்தில் வழக்கத்திற்கு மாறான, தவறான POST ஒன்று பதியப்படும். அந்நேரத்தில் பீப் ஒலி ஒன்று நமக்குக் கிடைக்கும். நாம் இதற்கான தீர்வை மேற்கொண்டு பின்னர் மீண்டும் பூட் செய்திட வேண்டும். மறுபடியும் அனைத்து சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, அவை அனைத்தும் சரியாக இருந்தால், கம்ப்யூட்டர் இயங்கத் தயாராய் இருக்கும். மேலே சொன்னவை தான் போஸ்ட் டெஸ்ட். ஒரு சிஸ்டம் இயங்கத் தேவையாகக் கம்ப்யூட்டர் மேற் கொள்ளும் சுய சோதனைகள். இதன் மூலம் கம்ப்யூட்டர், தன் இயக்கத்தில், எங்கு எந்த பிரச்னையை எதிர்கொள்கிறது என்பது நமக்கு அறிவிக்கப்படுகிறது. நாம் அதனைச் சரி செய்திட வழி காட்டப் படுகிறது.