கம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்தகையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன. ஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக் கின்றன என்று குற்றம் சாட்டுகின்றனர். அப்படியானால், பெர்சனல் கம்ப்யூட்டர் களிலும், மேக் கம்ப்யூட்டர்களிலும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் தொகுப்புகளை எப்படிக் கையாளலாம்?
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் முன், மால்வேர் புரோகிராம் ஒன்று எப்படி கம்ப்யூட்டருக்குள் நுழைகிறது என்பதனை அறிந்திருக்க வேண்டும். ஆனால், அங்குதான் வேறுபட்ட கருத்துக்களும் முடிவுகளும் உருவாகின்றன.
மேக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், விண்டோஸ் சிஸ்டத்தின் கட்டமைப்பே பாதுகாப்பற்றது என்று, தவறாக, கூறுகின்றனர். ஒரு சில இணையதளங்களுக்குச் செல்வதன் மூலமும், சில இமெயில்களைத் திறப்பதன் மூலமும், விண்டோஸ் பயன்படுத்துபவர்கள், மால்வேர் தொகுப்புகளைத் தங்கள் கம்ப்யூட்டரில் நுழைய விட்டுவிடுவதாகச் சொல்கின்றனர். இது முற்றிலும் உண்மையானது இல்லை.
இரண்டு வகைக் கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை சில விஷயங்களை ஒத்துக் கொண்டாக வேண்டும். 1. வைரஸ், வோர்ம், ட்ரோஜன் மற்றும் பல பெயர்களில் நாம் பத்து ஆண்டுகளுக்கு முன் தந்த விளக்க வரையறைகள், இப்போது உள்ள கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்குப் பொருந்தாது.
நீங்கள் அவ்வப்போது வெளியிடப்படும் செக்யூரிட்டி அப்டேட் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து இணைத்து இயக்கிவிட்டால், டவுண்லோட் செய்வதன் மூலம் வைரஸ்கள் வருவதற்கு இடமே இல்லை. கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைப் பொறுத்தவரை, அவை பரவும் விதம், கெடுதல் விளைவிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு சில குழுக்களாகப் பிரித்துவிடலாம்.
சமுதாய அடிப்படையில் வரும் செய்திகளின் அடிப்படையிலேயே, பெரும்பாலானவர்கள் தங்களின் கம்ப்யூட்டர்களில் வைரஸ் புரோகிராம்களை அனுமதித்து விடுகின்றனர். ஒரு சிலர் மேக் கம்ப்யூட்டர்களில் மால்வேர் மட்டுமே நுழையும். வைரஸ்கள் நுழைவ தில்லை என்று தவறாக முடிவு செய்கின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் வைரஸ்கள் என்று நாம் முன்பு பெயரிட்டது போல கெடுதல் விளைவிக்கும் நாசகார புரோகிராம்கள் வருவதில்லை. 1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த மெலிஸ்ஸா என்றழைக்கப்பட்ட வைரஸ் தான், உண்மையிலேயே வைரஸ் ஒன்றின் அனைத்து கெடுதல் முகங்களையும் கொண்டிருந்தது. அதன்பின் வைரஸ் என்று சொல்லப்பட்ட புரோகிராம்களின் கெடுதல் தன்மை அவ்வளவு தீவிரமாக இல்லை. பின் வந்த காலங்களில், மால்வேர் எனப்படும் கெடுதல் புரோகிராம்களே அதிகமான எண்ணிக்கையில் இருந்தன. சில இணைய தளங்களுக்குச் செல்கையில், அதில் உள்ள சில குறியீடுகள் இயங்கி, கம்ப்யூட்டரின் பபர் நினைவகத்தினைக் காலி செய்து, நேராக கம்ப்யூட்டரை இந்த மால்வேர் புரோகிராம்கள் சென்றடைந்தன. இந்த தளங்கள் பெரும்பாலும் சமுதாய இணைய தளங்களாகவோ, அல்லது அது போன்ற போர்வையில் தகவல்களைத் தந்து, மக்களை ஈர்ப்பனவாகவோ உள்ளன என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
மிக அதிகமான சேதத்தை விளைவித்தது கான்பிக்கர் வோர்ம் தான். 2010 ல் இதன் விளைவு மிக அதிகமாக இருந்தது. இதில் என்ன வேடிக்கை என்றால், 2008 ஆம் ஆண்டிலேயே, இந்த வோர்ம் வந்த வழியில் இருந்த பிரச்னைகளுக்கான தீர்வு ஒரு பேட்ச் பைலாகத் தரப்பட்டது. ஆனால், பலர் அதனைக் கொண்டு தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திடாமல் விட்டுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைவு மிக மோசமாகப் பின்னாளில் இருந்தது.
யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ்களின் ஆட்டோ ரன் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பல ட்ரோஜன் வைரஸ்கள் உலவி வருகின்றன. AutoRun, Rimecud Hamweq ஆகிய மூன்றும் இந்த தன்மை உடையவையே. ஆட்டோ ரன் தன்மையின் மூலம் மால்வேர் இன்ஸ்டால் செய்யப் படுவதில்லை. இதன் மூலம் டயலாக் பாக்ஸ் ஒன்றைக் காட்டி, அதன் மூலம் வைரஸ் புரோகிராமினை இன்ஸ்டால் செய்வதே இதன் வழிமுறையாகும்.
தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் என்ற பாகுபாடு இன்றி, வைரஸ்கள் அனைத்து சிஸ்டங்களிலும் பரவும் வகையிலேயே உருவாக்கப்பட்டு அனுப்பப் படுகின்றன. இருப்பினும் அனைத்து வைரஸ் பரவும் வழிகளுக்கும் உடனுடக்குடன் தீர்வுக்கான பேட்ச் பைல்கள் உருவாக்கப்பட்டு வழங்கப் படுகின்றன. இவற்றைக் கொண்டு நம் சிஸ்டத்தினை அப்டேட் செய்வது ஒன்றே நாம் நம் கம்ப்யூட்டரைப் பாதுகாத்திடும் வழியாகும்.